சென்னை:
வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.அப்போது அவர் கூறியதாவது, வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும், வடகிழக்கு பருவமழை தொடங்கும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கக் கூடும். புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா கடற்கரையிலும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
வடகிழக்கு பருவமழை வட தமிழகத்தில் இயல்பாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகும் இருக்கும். வடதமிழகம், தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வட தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.