தென்காசி
கோயம்பத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முதுகலை படித்து வரும் ர.ஸாருகலா தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செட்யயப்பட்டுள்ளார். ர.ஸாருகலாவுக்கு தற்போது வயது 22 மட்டுமே. இதன்மூலம் தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவராகிறார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதேயுடைய ர.ஸாருகலா 3,336 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் ர.ஸாருகலாவை எதிர்த்து போட்டியிட்ட மற்ற மூன்று பேர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.
ர.ஸாருகலாவின் தந்தை ரவி சுப்பிரமணியன் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவரது தாய் சாந்தி பூலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.