தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு பூட்டி சீல் வைத்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் விருப்பம் தெரிவித்தது.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமா? என கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆலை எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கதவு மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது மேலும் அதிரடிப் படைகள் குவிக்கப்பட்டு கையில் தடுப்பு வேலி வைத்த போலீசார் வைத்ததால் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.