பொங்கல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளில் அமோக மது விற்பனை நடைபெறும். வழக்கமாக பொங்கலுக்கு மறுநாள் (15-ந்தேதி) திருவள்ளுவர் தினம் கடை பிடிக்கப்படுவதால் அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
இந்த ஆண்டு பண்டிகை நேரத்தில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜனவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இன்று சரக்கு வாங்க குடிமகன்களின் கூட்டம் முண்டியடித்தது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் சமூக இடைவெளி இன்றியும், மாஸ்க் அணியாமலும் மதுப்பிரியர்கள் மது வாங்க திரண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படாததால் தொற்று தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.