ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கே ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புடீன் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24.27 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாமல் உள்ளதால், தற்போது வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புடீன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ரஷ்யா முழுவதற்கும் அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,25,325 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.