சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். அப்போது அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தனது பயணத்தை தொடங்கி தமிழக எல்லையை வந்தடைந்தார் சசிகலா.
தமிழக எல்லைக்குள் அதிமுக கொடியுடன் வந்தால் சசிகலா நடவடிக்கை எடுப்பது உறுதி என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக கர்நாடக எல்லையில் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்றமால் வந்ததால் காவல்துறையினர் சசிகலாவிற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதனையடுத்து அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வைத்துள்ளவரின் காரில் மாறி தனது பயணத்தை அதிமுக கொடியுடனே தொடங்கினர்.
வழிநெடுக மேளதாளங்கள் முழங்க, பூத்தூவி சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று காலை சசிகலா சென்னை வந்தடைந்தார். முன்னதாக சென்னை ராமாபுரத்திற்கு வருகை தந்த சசிகலா, அங்கிருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிய அவர், தியாகராய நகரில் உள்ள இளவரசியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இந்நிலையில், இன்றும் நாளையும் அவர் எங்கேயும் வெளியில் செல்லாமல் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.