தூத்துக்குடி:-
சாத்தான்குளம் சிறை மரணம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வணிகர்கள் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். அவர்கள் மரணம் அடைய, காவலர்கள் முரட்டுத்தனமாக தாக்கியதே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200724-WA0011-1024x634.jpg)
இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு எடுத்த மதுரை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராஜ் சின்கா, பூரண்குமார், எஸ்.ஐ-கள் சுஷில் குமார் வர்மா, சச்சின், காவலர்கள் அஜய்குமார், ஷைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி உள்ளிட்ட ஏழு பேர் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவில் இடம்பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் சச்சின் மற்றும் தலைமைக் காவலர் சைலேந்திர குமார் ஆகிய இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2020/07/IMG-20200724-WA0013-1024x682.jpg)
இந்த நிலையில், பவன், அஜய் என்ற மேலும் இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து உள்ளிட்ட மூன்று காவலர்களை வியாழக்கிழமை வரை சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியிருந்த நிலையில், புதன்கிழமையே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.