தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு.
அதன்படி தற்போது தமிழகத்தில் கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதேசமயம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுவது தொடரும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம். 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடத்திட்டங்களும், 10,11, 12-ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.