தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம் பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக அந்த ஆணையம் கூறுகையில், கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பிக்க ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வருகிற சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவம் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து 3 நாட்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது