சென்னை
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2021-ல் அதிமுக அரசின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது
கடந்த ஆட்சியின் கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ. 3 லட்சம் கோடியாகும். தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 பொது சந்தாக்கடன் உள்ளது.
தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு முன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை விபரம்
முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை மக்களிடம் அடையாளப்படுத்துவதே வெள்ளை அறிக்கை என்பதாகும். தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகால பேசுபொருளாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடடின் நிதி அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
தமிழகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி. பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
கடந்த 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.முதலமைச்சராக இருந்தபோது வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் வீசிய புயல் மற்றும் வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான வெள்ளை அறிக்கை தான் இந்த அறிக்கை.
அதைத்தொடர்ந்து 1981ம் ஆண்டு ஆகஸ்ட் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, உணவு பொருட்களின் கையிருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் நிலவிய வறட்சி நிலைமை குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
1994ம் ஆண்டு ஜனவரி மாதம் கடுமையான புயல், மழை, வெள்ள நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மழை, புயல், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுது. அதுபோன்று 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாகவும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2000ஆம் ஆண்டு மே மாதம் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசு பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பணிகளில் வழங்கிய இடஒதுக்கீடு, பின்னடைவு பணியிடங்கள் குறித்து முழுமையான தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் நிதி நிலைமை குறி த்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பின்னர் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை
இந்த நிலையில்தான் திமுக ஆட்சி வந்த முதன்முறையாக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில், தமிழக நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை விவரங்கள், கடன், செலுத்தப்பட்ட வட்டி உள்ளிட்ட விவரங்கள், உள்நாட்டு மொத்த உற்பத்தி, தனிநபர் வருமானம் உள்ளிட்டவை குறித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகாரிகளுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்.
இதுதவிர, சென்னை குடிநீர் வாரியம், மின்வாரியம், போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறைகளின் செலவுகள், நிதிநிலை விவரங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வரவு செலவு திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இவற்றின் அடிப்படையில், தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையின் நீட்சியாக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழக அரசின் நிதி நிலை, கடன் அளவை மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது, மக்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த வெள்ளை அறிக்கை உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.