இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் Mucormycosis என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும். இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய் தான் என்றாலும் குணப்படுத்தப்படக்கூடிய நோய் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்ளிட்ட 9 நபர்கள் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர். சிகிச்சை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் இதனால் இதுவரை உயிரிழப்பு இல்லை. சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.
இந்த கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் ராஜஸ்தானில் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த பாதிப்பை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.