டாஸ்மாக் கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவில், பள்ளிகள், பொது போக்குவரத்து என பலவற்றிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை உருவாக்கி வந்தது.
தற்போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது. வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. முக கவசம் கட்டாயம் மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் முக கவசம், கையுறை அணிவது அவசியம். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முக கவசம் அணிந்து வரும் நுகர்வோருக்கு மட்டுமே மதுவகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு டாஸ்மாக் கடைகளுக்கான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.