சென்னை:-
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து மனைவி பிரேமலதா, மகன் சண்முகப்பாண்டியனுடன் திரும்பினார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை விஜயகாந்த் தவிர்த்தார்.
அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை துபாய் சென்றார். விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியனும் உடன் சென்றார்.
அடுத்த ஓரிரு நாளில் மனைவி பிரேமலதாவும் துபாய் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சத்ரியன் திரைப்படத்தை செவிலியர்களுடன் ரசித்துப் பார்க்கும் புகைப்படம் வெளியானது.
இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.