அமெரிக்காவில் இருந்து சேலம் வந்த பெண் பொறியாளர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பெண் பொறியாளர் அமெரிக்காவில் இருந்து கடந்த 13-ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கு அவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, சென்னையிலேயே 4 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்த நிலையில், மீண்டும் கடந்த 17-ம் தேதி அவரது சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் வந்த அவர், வீட்டிலேயே 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சளி மாதிரி பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட பெண் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதும், அவருடன் விமானத்தில் வந்த மற்ற பயணிகளுக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத் தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.