ரஷ்யாவில், தன் 3 வயது குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு பார்ட்டிக்குச் சென்ற தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள கிரோவ் நகரைச் சேர்ந்தவர் 21 வயதான மரியா ப்லென்கினா தன் 3 வயது குழந்தை கிறிஸ்டினாவுடன் தனியாக குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
மரியா தன் நண்பர்களுடன் இணைந்து வெளியில் செல்வது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படிக் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, வெளியில் சென்ற மரியா 20-ம் தேதி வரை வீடு திரும்பவில்லை.
வீட்டில் தன் குழந்தையைத் தனியாக வைத்துப் பூட்டி, வீட்டில் யாரும் இல்லாததுபோல அனைத்தையும் செட் செய்துவிட்டுச் சென்றுள்ளார். மரியா வெளியில் சென்றிருந்த அதே வாரத்தில் குழந்தை கிறிஸ்டினாவுக்குப் பிறந்தநாள் வந்துள்ளது.
குழந்தைக்கு வாழ்த்து சொல்வதற்காகப் மரியாவின் தாய் இரினா பரிசுடன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு பயந்த அவர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
குப்பைக் கிடங்குபோல இருந்த வீட்டில் குழந்தை கிறிஸ்டினா இறந்த நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இரினா, கிறிஸ்டினா இறந்தது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவலர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். விசாரணையில்
குழந்தையின் தாய் மரியா, கிறிஸ்டினாவை வீட்டில் தனியாக வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். வீட்டில் குழந்தை இருப்பது தெரியக் கூடாது என்பதற்காக வெளியில் செல்லும் முன்பு, வீட்டின் தண்ணீர், மின் விளக்குகளையும் அணைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அதிக பசியினால் குழந்தை துணி துவைக்கும் பவுடரை உணவு என நினைத்துச் சாப்பிட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் குழந்தை துடிதுடித்து இறந்துள்ளது.
மரியா சிறைக் காவலில் இருக்கும்போது அவருக்கு உளவியல் நிபுணர்களின் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் உணவு, தண்ணீர் இல்லாமல் குழந்தையைத் தனியாக விட்டுச் சென்றது உண்மைதான்.
அதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால், கிறிஸ்டினாவைக் கொல்லும் நோக்கில் எதுவும் செய்யவில்லை. குழந்தை உயிரிழக்கும் என எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.
குழந்தையை வீட்டில் தனியாக விட்டு கொடூரமாகக் கொலை செய்த குற்றத்துக்காக மரியாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.