சுமார் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது.
16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள். குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
தேர்வு நடைபெற்று மிகக் குறைந்த நாள்களில் அதாவது 72 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை பார்த்ததும், சந்தேகம் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர்.
இப்படி அவர்கள், சாதிக்க காரணம் என்ன என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விசாரணையை தொடங்கியது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள், பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோர் விசாரணை வளையத்தின்கீழ் வந்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தரவரிசையில் முதல் நூற்றுக்குள், இடம் பெற்ற 39 தேர்வர்களுக்கு பதிலாக, தகுதி உடைய நபர்கள் தரச் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.