வாஷிங்டன்:
தென்சீனக் கடல் விவகாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், ஹாங்காங் விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. சீன ராணுவத்துக்கு சொந்தமான அல்லது சீன ராணுவம் கட்டுப்படுத்தும் சீன நிறுவனங்களில், அமெரிக்கா முதலீடு செய்யக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
சீன நிறுவனங்களின் பெயர்கள் சிலவற்றை பட்டியலிட்டு, அந்நிறுவனங்களுக்கு சீன ராணுவத்துடன் தொடர்பிருப்பதாக, அமெரிக்காவின் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.அந்த நிறுவனங்களின் பங்குகளில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டது.
அதன் வரிசையில் தற்போது சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, விமான தயாரிப்பு நிறுவனமான கோமேக் உள்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த 9 நிறுவனங்களிலும் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலீடு செய்திருந்த அமெரிக்கர்கள் வரும் நவம்பர் 11-ம் தேதிக்குள் தனது பங்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.