ஆங் சான் சூகி மீதான நான்கு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 60 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் ஆகியோரை ராணுவம் சிறை பிடித்தது.
இதில் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது, காலனித்துவ கால அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உள்பட 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை தலைநகர் நேபிடாவில் உள்ள கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.
விசாரணைக்கு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதிவந்தபோது ஆங் சான் சூகிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் என்று ஆங் சான் சூகியின் வழக்கறிஞர் கின் மவுன்ஸா கூறியுள்ளார்.
இந்த வழக்குகளில் உள்ள நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால் தலா 15 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 76 வயதான வயதான ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதும், அவர் மியான்மார் நாட்டு மக்களின் விடுதலைக்காக 21 ஆண்டுகள் சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்