கலிபோர்னியா
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜேக் டோர்சி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜேக் டோர்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தந்து ராஜினாமா குறித்து தெரிவித்துள்ளார்.
அதில், நிறுவனத்தில் இணை நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர், துணை தலைவர் வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, நான் வெளியேறுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மும்பை ஐஐடி மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். பராக் அகர்வால் 10 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டர் நிறுவனத்தில் சேர்ந்தார். ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, பராக் அகர்வால் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான யாகூ, மைக்ரோசாப்ட் மற்றும் ஏடி&டி ஆகியவற்றுடன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.