லண்டன்:-
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (55) மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் (32) ஆகியோருக்கு இன்று காலை லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு (NHS Maternity Team) நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
கொரோனா வைரஸுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் திங்களன்று பணிக்குத் திரும்பினார்.
அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கடந்த பிப்ரவரி இறுதியில் இந்த ஜோடி அறிவித்தது. அப்போதே சைமண்ட்ஸ் கர்ப்பமாக இருப்பதாகவும், அறிவித்தனர்.
ஆண் குழந்தை பிறந்த செய்தியை தொடர்ந்து அனைத்து தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்து செய்தி குவிகிறது.
பிரிட்டனின் கடந்த 150 வருட வரலாற்றில் பிரதமர் பதவியில் இருக்கும் பொழுது தந்தையான நான்காவது பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவார்.
இதேபோல் இதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் (David Cameron) மற்றும் அவரது மனைவி சமந்தா கேமரூனுக்கு (Samantha Cameron) ஃப்ளோரன்ஸ் (Florence) என்ற மகள் பிறந்தாள்.
அதேபோல அதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி (Tony Blair) பிளேயர்- செரி பிளேயர் (Cherie Blair) தம்பதிக்கு இரண்டாவது மகன் லியோ பிறந்தார்.
முதன்முதலில் பிரதமர் பதவியில் இருந்த போது தந்தை அனைத்துமே கூறியவர் ஜான் ரஸல் (John Russell 1st Earl Russell) ஆவார்.
இவர் இங்கிலாந்தின் பிரதமராக 1846 முதல் 1852 வரை பதவியில் இருந்தார். ஜான் ரஸலுக்கும் அவரது இரண்டாவது மனைவி பிரான்சிஸ் எலியட் முர்ரேவுக்கும் (Lady Frances Elliot-Murray-Kynynmound) இவரது பதவி காலத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தது. மொத்தம் இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள்.