டெல்லி :
சர்வதேச அளவில் முக்கிய தலைவர்களுக்கு கொரோனா வைரஸ் தடவிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இன்டர்போல் எச்சரித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்துபோதிலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.72 கோடியைக் கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 16.14 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.01 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த நிலையில் சர்வதேச காவல்துறை ஆணையமான இன்டர்போல், இந்தியா உள்ளிட்ட 194 நாடுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் முக்கிய தலைவர்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் மூலமாக கொரோனா தொற்றை பரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் அந்த தலைவர்கள்????? என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனவே முக்கிய தலைவர்களின் அலுவலகங்களில் பணிபுரிபவர்களை தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும் கடிதங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் இன்டர்போல் அறிவுறுத்தி உள்ளது. எக்காரணத்தை கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் கூடாது என்றும் இன்டர்போல் அறிவுரை வழங்கியுள்ளது.