நியூயார்க்:-
நியூயார்க்கில் இரண்டு பூனைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பூனைகளுக்கும் லேசான அறிகுறிகள் காணப்பட்டதாகவும், மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பூனைக்கு வீட்டின் உரிமையாளரிடம் இருந்து தொற்று பரவியுள்ளது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியான அவர் சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க விவசாயத் துறை மற்றும் தொற்று நோய் பரவல் மற்றும் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.
மற்றொரு பூனைக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என தெரியவில்லை. அந்த பூனையை வளர்த்து வந்த வீட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஒருவேளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இருந்து பரவியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு நியூயார்க்கில் உள்ள Bronx விலங்கியல் பூங்காவில் நாடியா (4) என்ற மலேசிய புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியானது. விலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது அதுவே முதல்முறை.
இதுகுறித்து Dr Casey Barton Behravesh கூறுகையில்:-
கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து அதிக அளவில் பரவுவதாக தகவல்கள் இல்லை என்றும் அதனால் மக்கள் யாரும் அச்சம் கொண்டு, செல்லப்பிராணிகளை தனித்து விடத் தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி பௌஸி (Dr. Anthony Fauci) கூறுகையில்:-
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளியே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் அதன் அருகில் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் வீட்டிற்குள்ளேயே இருப்பது போல், செல்லப்பிராணிகளையும் வெளியே அனுப்பாமல் இருப்பது நல்லது என கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ் மிருகக்காட்சி சாலையில் மேலும் 4 புலிகளுக்கும், 3 சிங்கங்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பனிச் சிறுத்தை, மேக சிறுத்தை, பூமா, அமூர் சிறுத்தை, சீட்டா ஆகியவற்றிற்க்கும் இலேசான அறிகுறிகள் தெரிவதாக விலங்கு காட்சிசாலை நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கு முன்னர் ஹாங்காங்கில் பூனை மற்றும் நாய்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதேபோன்று பெல்ஜியம் நாட்டிலும் பூனை ஒன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.