ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக கொண்டாடுகிறது.
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாப்பது ஓசோன் படலம்.
ஆனால் இந்த படலம் மனித செயல்பாடுகளால் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனை பாதுகாக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் ‘மான்ட்ரியல் ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதனை குறிக்கும் விதமாக 1987ல் இருந்து செப்., 16ம் தேதி உலக ஓசோன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஓசோன் என்பது வாயுக்களால் ஆன படலம். பூமியிலிருந்து 20 – 60 கி.மீ., உயரம் வரை பரவி உள்ளது. 20லிருந்து 25 கி.மீ., வரை அடர்த்தியாக பரவியுள்ளது. சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இவை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம்.
அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய பணி.
ஹைட்ரோ புளோரோ கார்பன் மற்றும் கார்பண்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் ஓசோனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஓசோன் வாயுக்கள் அளவு குறைந்தால், பூமியின் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும்.
ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
எனவே இந்த பூமியை காக்க ஓசோனை காப்போம் என இந்த உலக ஓசோன் தினத்தில் உறுதிமொழி ஏற்போம்.