ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகே மோட்லிங் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 நோயாளிகள் கருகி பலியாகினர்.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகே மோட்லிங் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. நோயாளிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட இந்த மருத்துவமனையில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் 3-வது தளத்தில் பிடித்த தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி கட்டுப்படுத்தினர். துரதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் சிக்கி 3 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரு பெண் படுகாயம் அடைந்ததில் சிகிச்சை பெற்று வருகிறார். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.