“உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார்” என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தர் மந்தரில் நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன், தில்லி ஜந்தர் மந்தரில் இருந்து மல்யுத்த நட்சத்திர வீரர், வீராங்கனைகள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற டெல்லி போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் பேசுகையில், என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார். உங்களிடம்(வீராங்கனைகள்) ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்பியுங்கள். நான் தண்டனை பெறத் தயாராக இருக்கிறேன் என்றார். இதனிடையே பாலியல் புகாரில் பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆதாரம் இல்லை, எனவும் சாட்சியங்களை கலைக்க பிரிஜ் பூஷன் முயற்சித்தாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும் டெல்லி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.