ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை
ஊக்கமருந்து சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை டபிள்யு.ஏ.டி.ஏவிடம் சமர்ப்பிக்க தவறிய காரணத்தால் ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உலக ஊக்கமருத்து எதிர்ப்பு ஏஜென்சியின் (டபிள்யு.ஏ.டி.ஏ) சிறப்புக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊக்கமருத்து சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை டபிள்யு.ஏ.டி.ஏவிடம் சமர்ப்பிக்க தவறிய காரணத்தால் சர்வதேச அளவிலான ஒலிம்பிக், உலகக்கோப்பை போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த தடையால் ரஷ்யாவால் வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 பீஜிங் விண்டர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், 2022 உலகக்கோப்பை கால்பந்து போன்ற மிகப்பெரிய போட்டிகளில் பங்கேற்க முடியாது. மேலும் போட்டி தொடர்களின் போது ரஷ்ய கொடியை பயன்படுத்தவோ அல்லது ரஷ்யாவின் தேசிய கீதம் இசைக்கவும் அனுமதியில்லை.
ஆனால் ஊக்கமருந்து பின்னணியில் சிக்காத ரஷ்ய வீரர், வீராங்கனைகள் தனிக்கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்கலாம். ஏற்கனவே கடந்த 2014ல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதுகுறித்து டபிள்யு.ஏ.டி.ஏ தலைவர் கிரேக் ரீடி கூறுகையில், கடந்த 2015 முதலே இந்த விவகாரத்தில் ரஷ்யா நேர்மையான செயல்பட தவறியதால் இந்த தடை முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.