பாரிஸ்:
இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரஸை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான எல்லையை மூடியுள்ளது.
இதனால், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இங்கிலாந்துடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் இரு நாட்டு எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சரக்கு லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் நிலவியது.இதையடுத்து, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இடையே இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்த பேச்சுவார்த்தையில், இங்கிலாந்தில் இருந்து சரக்கு லாரிகளை பிரான்ஸ் எல்லைக்குள் நுழைய அதிபர் இம்மானுவேல் மெக்ரான் சம்மதம் தெரிவித்தார். ஆனாலும், எல்லையிலேயே லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பின்னரே சரக்கு லாரிகள் இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.