வேலைக்கு போக சொல்லி தந்தை திட்டியதால், தனது தந்தை, தாய், சகோதரியை, இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் அயோவா பகுதியை சேர்ந்தவர், ஜேன் ஜாக்சன் (வயது 61). இவரது மனைவி, மெலிசா ஜாக்சன் (வயது 68). இவர்களுக்கு, அலெக்சாண்டர் ஜாக்சன் (வயது 20) என்ற மகனும், சபரீனா ஜாக்சன் (வயது 19) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், தனது வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் புகுந்து, தன்னையும், தனது தந்தையையும் துப்பாக்கியால் சுட்டு விட்டதாக, போலீசாரிடம் தொலைபேசியில் பதற்றத்துடன் மகன் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் சுடப்பட்டு கிடந்ததைப் பார்த்துள்ளனர். மேலும், அலெக்சாண்டர் காலில் காயத்துடன் கிடந்துள்ளார்.
அந்த மர்ம நபருடனான சண்டையில், துப்பாக்கி குண்டு காலில் பாய்ந்ததாக, போலீசாரிடம் அலெக்சாண்டர் கூறினார்.
ஆனால், வீட்டில் மர்ம நபர்கள் புகுந்ததற்கான அடையாளங்களோ, கொள்ளை நடந்ததற்கான சான்றுகளோ காணப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
தந்தை ஜேன் ஜாக்சன், வேலையில்லாமல் வீட்டில் இருந்த மகன் அலெக்சாண்டரிடம் சீக்கிரம் வேலைக்கு போ இல்லையா வீட்டை விட்டு வெளியே போ என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர், குடும்பத்தினரை கொலை செய்துள்ளார்.
மேலும், கொலை நடந்த வீட்டில் இருந்து துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தாய், தந்தை, சகோதரியை கொன்றதற்காக அலெக்சாண்டர் ஜாக்சன் கைது செய்யப்பட்டு லின் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
வேலைக்கு செல்ல மகனை வலியுறுத்திய தந்தை மற்றும் மொத்த குடும்பத்தையும் மகன் கொடூரமாக கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.