இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 73 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வினை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ப்லாவட்நிக் ஸ்கூல் ஆப் கவர்மெண்ட் (Blavatnik School of Government) ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சிறந்ததாக விளங்குகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 வகைகளில் இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகிறது, இதில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மூடுவதற்கு அரசாங்கங்கள் எவ்வாறு நடவடிக்கை எடுத்தன, பொது நிகழ்வுகளை ரத்து செய்தல், பொது போக்குவரத்தை மூடுவது, பொது தகவல் பிரச்சாரத்தைத் தொடங்குவது, உள் இயக்கம் மீதான கட்டுப்பாடுகள், சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள், நிதி நடவடிக்கைகள், பண நடவடிக்கைகள், சுகாதார சேவையில் அவசர முதலீடு, தடுப்பூசிகளில் முதலீடு, சோதனை கொள்கை, மற்றும் நோயாளியின் தொடர்பு தடமறிதல் ஆகியவற்றில் இருந்து தகவல்கள் திரட்டபடுகின்றன.
வைரஸ் தொற்று நாட்டிற்கு வந்ததிலிருந்து இந்தியா விரைவாக செயல்பட்டு வெடிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்தது. 21 நாட்கள் ஊரடங்கு, விரைவான சோதனை, பொது போக்குவரத்து மற்றும் சர்வதேச பயணங்களை நிறுத்தியது, சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்தது.
ஏழைகளுக்கு ஆதரவளிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி வீதக் குறைப்பு மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஆக்ஸ்போர்டு கண்காணிப்பு புள்ளிவிவரங்கள் (Stringency Index) படி இந்தியா 100 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் விரைவான நடவடிக்கைகளை வெளியிடுவதில் பின்தங்கியுள்ள நிலையில் உள்ளது.
இந்தியாவைத் தவிர்த்து 100 புள்ளிகளை பெற்ற மற்ற நாடுகள் இஸ்ரேல், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ் ஆகியவையாகும்.
செக் குடியரசு, இத்தாலி, லெபனான், ஃபிரான்ஸ் போன்றவை 90 புள்ளிகள் பெற்று உள்ளன. ஜெர்மனி மற்றும் அமெரிக்கா 80 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே நேரத்தில் யுனைட்டட் கிங்டம் 70 புள்ளிகள் தான் பெற்றுள்ளது.
இந்த ஆய்வு ப்லாவட்நிக் ஸ்கூல் ஆப் கவர்மெண்ட் கல்லூரியின் பேராசிரியர் தாமஸ் ஹேல் தலைமையில் நடைபெற்றது.