பேங்காக்:-
தாயின் வயிற்றிலிருந்து உலகை எட்டிப் பார்க்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க தாய்லாந்தில் உள்ள மருத்துவமனையில் முக கவசம் அணிவிக்கப்படுகிறது.
பிரசவ அறையில் முக கவசம் அணிந்த நர்சுகளின் கைகளில் முக கவசம் அணிந்த நிலையில் இருக்கும் குழந்தைகளின் காட்சிகளை பாங்காக்கில் உள்ள பிராரம்-9 (Praram-9) என்ற மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
வெல்டர்கள் அணியும் முக ஷீல்டுகளை போன்ற பிளாஸ்டிக்கினால் இந்த முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருமல் மற்றும் தும்மலால் மருத்துவப் பணியாளர்களிடம் இருந்து கொரோனா பரவாமல் இருக்க பிறந்த உடன் குழந்தைகளுக்கு முக கவசம் அணிவிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா Prayuth-O-Cha இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மக்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வெளியே நடமாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் இதுவரை 2000 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.