ஹோஹோட்(Hohhot):-
மங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு சீனாவின் தன்னாட்சி பகுதியான (Autonomous Region) உள்-மங்கோலியாவின் (Inner Mongolia) கோபி-அல்தாய் (Gobi-Altai) மாகாணத்தின் நோய்த் தொற்றுக்கு உள்ளான மர்மோட் வகை அணிலை உண்ட 15 வயது சிறுவன் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவனுடன் தொடர்பில் இருந்த 15 பேரும்; மர்மோட் உண்ட மேலும் 2 இளைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்-மங்கோலியா அரசு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ்கள் கொடுக்கப்பட்டு, தற்பொழுது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்று மங்கோலிய சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் நரங்கெரெல் டோர்ஜ் (Narangerel Dorj) தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கோபி-அல்தாய் மாகாணத்தின் சில பகுதிகள், பையனூர் (Bayannur) பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆசியாவில் புல்வெளி பகுதிகளில் அதிகளவில் காணப்படும் பெரிய கொறித்துண்ணிகளான மர்மோட்டில் இருந்து பிளேக் நோய் பரவுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில் அவற்றை வேட்டையாடவும் உண்ணவும் மங்கோலியா அரசு தடை விதித்துள்ளது. இந்த வகை மர்மோட் அணில்கள் மங்கோலியாவின் சில பகுதிகளில் வடமேற்கு சீனா ரஷ்யா ஆகிய பகுதியில் காணப்படுகின்றன.
முன்னதாக சீனாவின் மத்திய மாகாணமான ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரைச் சேர்ந்த ஒருவர் நோய் தொற்றுக்கு உள்ளான வவ்வால் ஒன்றை உண்டதன் விளைவாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. (இதுவரையில் அதிகாரப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை). இந்நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் இருந்து அடுத்த உயிர்கொல்லி நோய் பரவ ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக கொடிய நோயாக புபோனிக் பிளேக் கருதப்படுகிறது.