நியூயார்க்:-
உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரன் பஃபெட் (Warren Buffett)-ஐ பின்னுக்கு தள்ளி 7வது இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் கடந்த 2 மாதங்களாக உலகின் பல்வேறு பிரபல நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. கடந்த ஏப்ரல் 22ம் ஆண்டு முதல் ஜியோவில் 12 நிறுவனங்கள் மொத்தமாக ரூ. 1,17,588.45 கோடி முதலீடு செய்து 25.09 சதவீதம் பங்குகளை வாங்கியது. இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை அடைந்து விட்டதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மார்ச் 31, 2020க்குள் இந்த நிலையை அடைய வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாகவே இலக்கை அடைந்ததன் மூலம் பங்குதாரர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்திருந்தார். கொரோனா பாதிப்பால் பல நிறுவனங்கள் சரிவை சந்தித்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடுகள் குவிந்தன. இந்நிலையில் பணக்காரர்களின் பட்டியலில், முகேஷ் அம்பானி 68.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்த அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பே 70.1 பில்லியன் டாலராக உள்ளது. 67.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வாரன் பஃபெட் 8-வது இடத்தை பிடித்துள்ளார். வாரன் பஃபெட் சுமார் 2.9 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதால் அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 188.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 110.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.