இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அதேசமயம் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக மே 9 முதல் மே 10ஆம் தேதிவரை ‘ஜெருசலேம் தினம்’ என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடுவதாக இருந்தது. இதனையடுத்து இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக, பாலஸ்தீனத்தின் காஸா முனையை தன்னாட்சி உரிமை பெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் காஸாவில் 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை வீச்சில் இஸ்ரேல் பகுதியில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனிடையே இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என பல சர்வதேச நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
இரு நாட்டை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள்கள் உயிரிழப்பதால் இந்த மோதலை நிறுத்த வேண்டும் என இருதரப்பிடமும் ஐ.நா.பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.