கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களின் வேலையிழப்பை ஈடுகட்ட மற்ற ஊழியர்கள் விடுமுறையை தானமாக தர வேண்டும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் துணை நிறுவனங்களில் ஆஸ்டினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஹோல் புட்ஸ்’ (Whole Foods) ஒன்று. இந்த நிறுவனம் மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்களை ஆன்லைனில் வர்த்தகம் செய்கிறது.
இதன் தலைமை செயல் அதிகாரி ஜான் மெக்கே ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்கள் சில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிறுவனத்திற்கு ஏற்படும் வேலையிழப்பை சக ஊழியர்கள் தங்கள் ஓய்வு நேரம் மற்றும் விடுமுறையை தானமாக அளித்து ஈடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க செனடர் பெர்னி சாண்டர்ஸ் கூறியதாவது:
அமேசான் நிறுவனம் ஆண்டுக்கு 11 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்கிறது. ஆனால் ஒரு டாலர் கூட வரி கட்டுவதில்லை. ஏனெனில் அரசு நிறுவனத்திற்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்களின் வேலையிழைப்பை ஈடுகட்ட மற்ற ஊழியர்களின் ஓய்வு நேரத்தை சம்பளம் இல்லாமல் ஓசிக்கு கேட்கிறது. இது நியாயமா. இது முழுக்க முழுக்க அந்த நிறுவனத்தின் சுயநலம் சிந்தனையை வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
இதுபோலவே அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்கு (Jeff Bezos) பலரும் தனது எதிர்ப்பை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தனது லாபம் மற்றும் நிறுவன வளம் சார்ந்த நிதியை பெசோஸ் கொரோனா வைரஸ் பாதித்த ஊழியர்களின் வேலையிழப்புக்கு பயன்படுத்தாமல், தினசரி சம்ளபத்திற்காக மட்டும் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு நேரத்தை சுரண்டும் போக்கு கண்டிக்கதக்கது என தெரிவித்துள்ளனர்.