கொழும்பு:-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தமிழ் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் செவ்வாய்கிழமை இரவு காலமானார்.
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கையில் பெருந்தோட்ட உட்கட்டமை அபிவிருத்தி துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் ஆறுமுகன் தொண்டமான் (55).
அவர், அவருடைய இல்லத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆறுமுகன் தொண்டமான் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்கிழமை காலமானார்.
இவரது மறைவிற்கு இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.
ஆறுமுகன் தொண்டமான், 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.
1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றிய அவர், 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றப் பிரவேசத்தை பெற்ற அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களின் வெற்றி பெற்றார்.
பல அமைச்சு பதவிகளை வகித்த அவர், தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சு பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.