வியன்னா :
பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 6 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 14க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட குழுவை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வியன்னா நகரில் பெரும்பாலான பகுதிகள் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், “இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்” என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வியன்னா நகர மேயர் மைக்கேல் லுட்விக், இந்த சம்பவம் பற்றி “இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவின் உள்துறை மந்திரி கார்ல் நெஹம்மர், “நகரத்தின் மையத்தில் கூடுவதை தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய அவர், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு” அறிவுறுத்தினார்.
நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால்,அவர்கள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா??? என்பது இன்னும் தெளிவாகவில்லை.நடந்த தாக்குதலை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். செக் குடியரசு நாட்டை இணைக்கும் ஆஸ்திரியா எல்லையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், “தீவிரவாதத்தின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வியன்னாவிலும் வெறுப்புணர்வுத் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. இது நமது ஐரோப்பா. நேற்று எங்களை தாக்கினர், இன்று எங்களுடைய நண்பரை தாக்கியுள்ளனர். இதை தொடர விடக்கூடாது” என்று தெரிவித்தார்.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட், துப்பாக்கி சூடு சம்பவத்தை கொடூரமான தாக்குதல் என்றும் துயரமான இந்த தருணத்தில் வியன்னாவுக்கு ஆதரவாக தமது நாடு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தீவிரவாத தாக்குதல்களால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பிரிட்டன் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.