லண்டன் :
லண்டனில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் 3-ம் கட்டமாக சோதனை நிகழ்த்தி வரும் இந்த நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95% சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 நாட்களுக்குள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு பிரிட்டன் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மேலும், 9-ம் தேதிகளுக்குள் இங்கிலாந்தில் உள்ள பெரும்பலான மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வந்து சேரும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை பயன்படுத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் முதல் மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட இருக்கிறது.