ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் நிதி அளிக்க உள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் சமீபத்தில் அங்கு காட்டுத் தீ ஏற்பட்டது. ஆனால் பல லட்சம் ஏக்கர்கள் அழிந்ததோடு மட்டுமல்லாமல், இன்னும் இரண்டு மாதங்களில் காட்டுத்தீ உச்ச நிலையை எட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெருகி வரும் காட்டுத் தீயை அணைக்க red cross bushfire appeal அமைப்பு போராடி வருகிறது.
இந்த நிலையில் இவர்களுக்கு நிதி உதவி அளித்து உதவப் போவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அறிவித்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் பிக்பேஸ் தொடரில் தாங்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர்களுக்கும் 250 டாலர்களை அளிக்கப் போவதாக கிறிஸ் லின், மேக்ஸ்வெல், ஷார்ட் ஆகியோர் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகமும் மார்ச் மாதம் நடைபெறும் ஒரு நாள் போட்டியின் வருமானம் முழுவதையும் தரப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு நிற சட்டை அணிந்து விளையாடுகின்றனர்.