சீர்காழி:-
சீர்காழி அருகே பூம்புகார் பகுதியில் மர்மமான முறையில் காகங்கள் செத்து விழுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி ஏற்பட்டது. சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் காகங்களும், நாய்களும், மாடுகளும் வழக்கத்துக்கு மாறாக நடந்து கொண்டன.
இந்நிலையில் பூம்புகார் மீனவர் காலனி குடியிருப்பில் நூற்றுக்கணக்கான காகங்கள் திடீர் என்று சப்தமாக கரைந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொன்றாக சுருண்டு விழுந்து இறந்தன. 50க்கும் மேற்பட்ட காகங்கள் இவ்வாறு இறந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே பகுதியில் மூன்று நாய்களும் அடுத்தடுத்து இறந்துள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு விலங்குகளும் பறவைகளும் வழக்கத்துக்கு மாறாக நடந்து கொண்டு சப்தம் எழுப்பி கதறி உள்ளது. இதனால் மீண்டும் சுனாமி ஏற்படுமோ என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து இறந்த காகங்கள் மற்றும் நாய்களை குழிதோண்டிப் புதைத்த மக்கள் அப்பகுதிகளில் மஞ்சள் நீர் தெளித்தனர்.
ஏதேனும் நோய் தொற்றால் காகங்கள் இறந்ததா அல்லது யாரேனும் விஷம் வைத்துக் கொன்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.