சென்னை:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் இரண்டாயிரத்தையும் தாண்டியுள்ளது.
கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக திருமழிசை பகுதியில் காய்கறி மார்கெட் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருமழிசையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் கடைகள் வரும் என தெரிகிறது. முதற்கட்டமாக இங்கு 100 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் திருமழிசை பகுதியில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகும் என்பதால், சென்னை மக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த காய்கறி சந்தை 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், வியாபாரிகள் இன்று அதிகாலையே வந்துவிட்டனர். ஆனால் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாததால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினார்.