தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியது. அதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்பு குறைவு. கூடுதல் வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறியும் பணிகள் நடந்து வருவதால், முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்பில்லை. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு உரிய காலத்தில்தான் தேர்தல் நடத்தப்படும். ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட உள்ளதால் கூடுதல் வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவுள்ளன. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக” கூறியுள்ளார்..