மும்பை:-
ஊரடங்கு காலத்தில் மகாராஷ்டிர அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் மும்பை வரப் போவதில்லை என தெரிவித்தனர்.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்ற அவர்கள், ஊரடங்கு காலத்தில் நரக வேதனையை அனுபவித்ததாக வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுகையில்:-
நாங்கள் இனிமேல் மும்பைக்கு திரும்பி வரவே மாட்டேன். இங்கு பல பிரச்னைகள் எனக்கு ஏற்பட்டன. அரசு எங்களை கைவிட்டு விட்டது. நாங்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான பணம் மட்டும் எங்களுக்கு போதும். நாங்கள் சொந்த ஊரிலேயே இருந்து கொள்வோம் என்று தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த 5 ஆம் தேதி முதல் ஷ்ராமிக் ரயில்களில் பயணம் செய்ய பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். தாராவி, குர்லா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இவர்கள் சிறப்பு பேருந்துகள் வாயிலாக ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் இருந்து சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கட்டிட தொழில்களுக்காக மகாராஷ்டிராவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசிடம் பதிவு செய்திருக்கிறார்கள்.