டெல்லி:-
கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம்
தொடர்ந்து அத்துமீறி வந்தது. இந்நிலையில் கல்வான் பகுதியில் திங்கட்கிழமை நள்ளிரவில் இந்திய வீரர்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. சீனா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர், கற்கள், தடிகளால் மற்றும் கொடூர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், இந்தியா தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் என மூன்று பேர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது.
பின்னர், தாக்குதலில் காயமடைந்த மேலும் 17 வீரர்கள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்ததாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துது. இதனால் இந்திய வீரர்களின் உயிரிழப்பு 20 ஆக உயர்ந்தது. சீனத் தரப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் மோசமாக படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 43 என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, எல்லையில் சீன ஹெலிகாப்டர்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், லடாக் எல்லையில் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த சீன தரப்பினரை மீட்டு செல்ல அந்நாட்டு ஹெலிகாப்டர்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதலை தொடர்ந்து உடனடியாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங் விவாதித்தார். அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். சீன பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இரவு 11.30 மணி அளவில் அமித் ஷா புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு, பாதுகாப்பு மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டங்களை பிரதமர் மோடி நடத்தினார்.
இதனிடையே, இந்தியா, சீனா இடையிலான உயர்மட்ட அளவிலான உடன்படிக்கையை சீனா மீறி விட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. தனது எல்லைக்குள்ளேயே இந்தியா தனது செயல்பாட்டை மேற்கொண்டதாகவும், இந்தியாவை போலவே சீனாவும் செயல்படும் என நம்புவதாகவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், லடாக் எல்லை பகுதியில் இரு நாடுகளும் அமைதியை பேணுவது மிகவும் அவசியம் எனவும் லடாக் எல்லை நிலைமையை ஒருதலைபட்சமாக சீனா மாற்ற முயன்றதே பிரச்சினைக்கு காரணம் எனவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியவுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா:-
சீனத் தரப்பு தான்தோன்றித் தனமாக எல்லையில் உள்ள கட்டுப்பாட்டையும் நடைமுறையையும் மீறி செயல்பட்டதே, 15 ஜூன், 2020 அன்று இரு தரப்பு மோதலுக்குக் காரணம். இதன் விளைவாக இரு தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புகளும் பேசி போட்டுக் கொண்ட உடன்படிக்கையை சீன ராணுவம் பின்பற்றியிருந்தால் இந்த மோதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றார்.