டெல்லி:-
லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன.
இதனைத்தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கின. படைகள் பின்வாங்கிய போது, சீன ராணுவத்தினர் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 4 பேர் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்:-
பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்..? ஏன் ஒளிந்து கொண்டு இருக்கிறார்?
போதும் போதும். என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.
நமது வீரர்களை கொல்ல சீனாவிற்கு எவ்வளவு தைரியம்..?
நமது நிலத்தை எடுக்க சீனாவிற்கு எவ்வளவு துணிச்சல்? என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.