தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய அரண்மனை தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் வெங்கடேசன்(32). இவர் கப்பலில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பாரம்பரிய வீட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக வீடு கட்ட முடிவு செய்திருந்தார்.
இவர் புதிதாக கட்டப்படும் அந்த வீட்டை பாரம்பரியம் மாறாமலும், அதேசமயம் நவீன வசதிகளுடனும் கட்டுவதற்கு திட்டமிட்டார். இதனால் 100 அடி நிலத்தில் இருந்த பழைய வீட்டை இடித்து விட்டு முன்பக்கம் இடம் விட்டு பின்புறம் வீடு கட்ட வரைபடம் தயார் செய்தார்.
இதில் அவரது தாய் தந்தையர் இவரது பிறந்த தினத்தன்று நடப்பட்ட வேப்பமரம் வெங்கடேசன் உடன் சேர்ந்து வளர்ந்துள்ளது. இது அவருக்கு சகோதரர் போல் இருந்துள்ளது. ஆனால் புதிய வீடு கட்ட உருவாக்கப்பட்ட வரைபடத்தில் வேப்பமரம் வீட்டின் நிலைக்கதவுக்கு அருகில் வருவதால் அதனை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவர்களுக்கு அதை வெட்ட மனம் இல்லாததால் புதிய வீடு கட்டுவதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார். அதன்படி வேப்ப மரத்தை முழுவதும் வெட்டாமல் கிளைகளை மட்டும் வெட்டியுள்ளார். பின்னர் புதிய வீடு கட்டி அவற்றுக்கு கான்கிரீட் அமைத்து முன்பக்கம் மரத்திற்கு அருகிலேயே இருக்குமாறு வீட்டை அமைத்துள்ளார்.மேலும் வீடு கட்டுவதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இவற்றில் உருவாக்கியுள்ளார்.
இதனால் அவரின் வீட்டை தாண்டி செல்லும் ஊர் மக்கள் அந்த வீட்டை வியப்புடன் பார்த்து வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் இந்த வீட்டை கட்டிய இன்ஜினியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெங்கடேசன் கூறும்போது: ” நாங்கள் எங்களுடைய பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு இருந்தோம், ஆனால் தன்னுடன் சேர்ந்து வளர்ந்த வேப்ப மரத்தை வெட்டும் நிலை ஏற்பட்டதால் அதனை வெட்டுவதற்கு மனமில்லாமல் அதை அப்படியே வைத்து புதிய வீடு கட்டினோம். இந்த வேப்பமரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு எங்களோடு இருக்கும், இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.