ஆந்திரா:
தங்கம் என்றாலே அதன் மீது எல்லோருக்கும் தனி காதல் தான். ஏழை முதல் பணக்காரன் வரை யாராக இருந்தாலும் தங்கத்தை இன்னும் சேர்த்து வைக்கவேண்டும் என்று தான் நினைப்பார்கள்.தங்கம் இல்லாதவர்கள் அதை எப்படியாவது அடைந்து பணக்காரன் ஆகி விட வேண்டும் என்று போராடுவார்கள்.அப்படி தங்கத்தின் மீது காதல் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் வரப்பிரசாதமாக ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உப்பாடா கடற்கரை திகழ்கிறது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள உப்பாடா கடற்கரையில் புயல் ஏற்படும் போதெல்லாம் தங்கம் கிடைக்கிறது.சில வருடங்களாகவே புயல் பாதிப்பு ஏற்பட்டு முடிந்த பின் கடற்கரையில் தங்க ஆபரணங்களை அப்பகுதி மக்கள் எடுத்துள்ளனர்.இப்படி தொடர்ந்து நடப்பதனால் எப்போது புயல் ஏற்பட்டாலும், அங்கு இருக்கும் மீனவ மக்கள் உப்பாடா கடற்கரையில் சென்று தங்க ஆபரணங்களை தேடுகின்றனர்.
அந்த வகையில் நவம்பர் 26 ஆம் தேதி வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உண்டான நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடந்தது.இதனால் தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.இந்நிலையில் புயல் ஏற்பட்டாலே தங்கத்தை தேடும் கிராம மக்கள்.நவம்பர் 27ஆம் தேதி உப்பாடா கடற்கரையில் ‘மங்கள தீபா’ என்ற பகுதியில் தங்கத்தை ஆர்வத்துடன் தேடினர்.அவர்களின் நம்பிக்கை வீண் போகாத வகையில் தங்க மணிகளை கண்டெடுத்துள்ளனர். இப்படி ஒவ்வொரு புயலுக்கும் தங்கம் கிடைப்பதால் “புயல் வந்தா தங்கம் கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் அந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த உப்பாடா கடற்கரை பகுதியை ஒட்டி சில வருடங்களுக்கு முன்பு கோயில் இருந்ததாக கூறப்படுகிறது.இங்கு புனித நீராட வரும் பக்தர்களின் நகைகள் தவறுதலாக நீரில் விழுந்திருக்கலாம். புயலின் போது ஏற்படும் பெரிய அலைகளில் சிக்கி கொள்ளும் தங்க நகைகள் கரையில் வீசப்படலாம்.அவற்றை மக்கள் தேடும் போது அவர்களுக்கு தங்கம் கிடைக்கிறது என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது.
மேலும் உப்பாடா கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்படும் தங்கத்திற்கு இதுவரை எந்த ஒரு அறிவியல் விளக்கமும் அளிக்கபடவில்லை.அடுத்த புயல் ஏற்பட்டாலும் எங்களுக்கு தங்கம் கிடைக்கும் என்பதே அந்த கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.