இலங்கை கடற்படையினர் அண்மையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இதற்காக இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், திமுக அமைப்புச்செயலாளர் ஆர் எஸ் பாரதி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உயிரிழந்த மீனவர்களின் உடல்களை பார்க்க அனுமதிக்காதவர்கள் ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்று தெரிவித்தார். 4 மீனவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை தமிழக அரசு ஒரு வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தான் இலட்சியங்களுக்காக அரசியல் நடத்துவதாகவும், பெரியார், அண்ணா வழியில் பாடுபடுகிறோம் என்று சொல்ல தனக்கு தகுதி உள்ளதாகவும் அவர் கூறினார்.