சிங்கம் 2 படத்தில் வருவது போல தூத்துக்குடியில் இலங்கைக்கு தப்ப முயன்ற சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை துரைசிங்கம் பாணியில் கியூபிரிவு போலீசார் மடக்கி கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி கடலோர பகுதியில் வெளிநாட்டு நபர் சுற்றித் திரிவதாக கியூ பிரிவு டிஎஸ்பி சந்திரகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திரேஸ்புரம் அருகே முத்தரையர் காலனி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சுற்றிக் கொண்டிருந்த வெளிநாட்டு நபர் ஒருவரை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் விசாரணையில் அவர், இங்கிலாந்து நாட்டின் லிட்டில்ஹேம்ப்டன் பகுதியை சேர்ந்த ஜொனதன் தோர்ன் (வயது 47) என்பது தெரியவந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூரில் இருந்து மதுரை வந்த இவர், பின் சாலை மார்க்கமாக தூத்துக்குடி வந்துள்ளார். தூத்துக்குடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்வதற்காக தூத்துக்குடியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது.
மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தனியார் ஹோட்டலில் ஜொனாதன் தங்கியிருந்த அறையிலிருந்து இரண்டு விலையுயர்ந்த ஐ-போன்கள், இந்திய பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், ஐக்கிய அரபு நாடுகளின் பணம் திர்ஹம், இலங்கை, நேபாளம், வங்காள தேச நாட்டு பணம்.
இதுதவிர இங்கிலாந்து நாட்டின் இரண்டு பாஸ்போர்ட்டு, இந்திய நாட்டு பாஸ்போர்ட்டு ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட ஜொனதன் மீது மும்பை காவல் நிலையத்தில் பல்வேறு போதை பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், படகு மூலம் போதைப்பொருள் கடத்தலுக்காக தூத்துக்குடியிலிருந்து திருட்டுத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதற்காக அவர் படகு உரிமையாளர் ஒருவரை இடைத்தரகர் மூலம் சந்திக்க இருந்த நேரத்தில் தான் சிக்கியுள்ளார்.
அவரது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து, தன்னை என்ன செய்தாலும் ஐபோன்களை ஓப்பன் செய்ய முடியாது என்று சிங்கம் பட மைகேல் காங் போலவே அசால்ட்டாக பதில் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஜோனாதன் தோர்ன் இந்தியாவில் வசிப்பதற்காக ஓசிஐ (ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா) என்ற கார்டை பெற கோவாவில் மணிப்பூரை சேர்ந்த யாங்கரேலா வாஷூம் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கடந்த 2018 ஜூன் மாதம் மும்பை, பரோடா மற்றும் கோவா போதை பொருட்கள் பறிமுதல் தொடர்பாக இந்திய தொழிலதிபர் உள்ளிட்ட 12 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் மற்றும் ஜான்பிரேஸ்கன், வியட்நாமை சேர்ந்த நஜிமன் கோங் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் கடந்த 2019 ஆகஸ்ட் வரை இவர் மும்பை சிறையில் இருந்த தோர்ன் பின்னர் அங்கிருந்து பரோலில் வந்த இவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு, போதை பொருட்களை கைமாற்றி விடுவதில் கில்லாடியாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, அவர் தூத்துக்குடியில் யாரை சந்தித்தார், அவருக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.