தஞ்சாவூர்:-
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார் ஜோதிகா. அதோடு, குழந்தைகளை காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்தும் குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையை பணமாக வழங்கியுள்ளார்.
ஜோதிகா மணி இந்த உதவிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் ஆகியோர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருதுதுரை ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.
“ஜோதிகாவின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ், குறிப்பிட்டுள்ளார்.
“தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகாவின் உதவி சரியான முன் உதாரணம்” என்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருதுதுரை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.