2020ஆம் ஆண்டின் முதல் கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு நான்கு முறை சந்திர கிரகணம் நடைபெறும் நிலையில், முதல் கிரகணம் இன்று இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது.
முழுமையான அளவு, பாதி மற்றும் பெனும்ப்ரல் வகை என 3 வகையான சந்திர கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானதாகும். இந்த வான் நிகழ்விற்கு நாசா ‘ஓநாய் சந்திர கிரகணம்’ என்று பெயரிட்டுள்ளது.
இது இந்த முறை இந்தியாவில் தெரியும். அதே நேரத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளும் சந்திர கிரகணத்தைக் காண முடியும். மேலும் முழு சந்திர கிரகணம் 4 மணி நேரம் 5 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்க முடியும். எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது கூடுதல் அம்சம் ஆகும்.
இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழும் என கூறப்பட்டுள்ளது.